மாங்காட்டைச் சேர்ந்த, மனிதநேயம் மிகுந்த சகோதரி மேரி .அப்பகுதியில் வசிக்கும் 10 நலிவுற்றக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுத்து தாயன்புடன் செயல்பட்டு வருகிறார்.
மாங்காட்டில் நீண்ட காலமாக வாழும் 75 வயது கொண்ட சமாதானம் அம்மையார் பற்றி நம்மிடம் இவர் கூறினார். அவர் மழையிலும் வெயிலிலும் அவதிப்பட்டு வாழ்வதாகவும் அவருக்கு உதவ முயற்சி செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
நானும் நண்பர் கோவிந்தராஜும் மாங்காடு சென்று அந்த அம்மையாரைப் பார்த்தோம். ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார், அந்த அம்மையார்.
பெயர் தான் வீடே தவிர, வீட்டுக்குள் போனால் வானம் முழுவதும் தெரிந்தது.
“வெயில், மழையால் மிகவும் கஷ்டப்படுகிறேன், நன்றாகத் தூங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது” என்றார் அந்த அம்மையார் கண்ணீர் மல்க.!
” எனக்கு அருகில் இருந்து உதவி செய்யும் உறவுகள் இல்லை. உங்களைப் போன்ற மனிதநேயம் உள்ளவர்கள் தான் உதவி செய்து வருகிறார்கள். அரசாங்கம் உதவிப் பணம் தருகிறது. சாப்பாட்டுக்கு அது போதும். இந்த வீட்டுக் கூரையில் உள்ள ஓட்டை உடைசல்களை சரி செய்து கொடுங்கள் போதும்” என்றார்.
நண்பர் கோவிந்தராஜ் சிவில் இன்ஜினியர் ஆவார். அந்த வீட்டை ஆய்வு செய்து விட்டு, இந்த வீட்டைத் தாங்கி நிற்கும் மரத்தூண்கள் உறுதியானதாக இல்லை. இதற்கு மேல் நாம் ஏதாவது சீட் போட்டு கொடுத்தால் பலத்த காற்று அடித்தால் கூரை சாய்ந்து விடும், இரும்பு தூண்கள் போட்டு சீட் அடித்துக் கொடுத்தால் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது, இதற்கு சுமார் ரூபாய் 40,000 செலவாகும்” என்றார்.

இந்த 75 வயது மூதாட்டி நிம்மதியாக உறங்குவதற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் நண்பர்களே, என்று கூறியவுடன்,
மனிதநேயர். பாலாஜி (அமெரிக்கா) ரூ 10,000
மனித நேயர் ஸ்ரீராம் (உதவும் கைகள்) ரூ.10,000,
மனிதநேயர் ராஜா (உதவும் கைகள்) ரூபாய் 5000
மனிதநேயர் நீலேஸ் (திருவள்ளூர்) ரூபாய் 3000
அனுப்பி வைத்தனர்.
இது போக, கருணை உள்ளம் கொண்ட மக்கள் ரூபாய் 50 முதல் 500 வரை அனுப்பி வைத்தனர். இந்தத் தொகை ரூபாய் 7000 சேர்ந்தது.
கூடுநலாக பணம் கொஞ்சம் தேவைப்பட்டது அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வயது முதிர்ந்த அந்த அம்மையாருக்கு அழகான வீடு தயாரானது.
பலத்த இரைச்சலுடன் ஒரு பழைய ஃபேன் வீட்டில் ஏற்கனவேஓடிக் கொண்டிருந்தது. அதை சர்வீஸ் செய்து மாட்டினோம். பழைய குண்டு பல்பு ஏற்கனவே எரிந்து கொண்டிருந்தது.
ஒரு டியூப் லைட் போட்டு வீட்டுக்குள் பிரகாசம் பாய்ச்சிக் கொடுத்தோம்.
அருமை நண்பரும் பொறியாளருமான கோவிந்தராஜ் இந்த வேலைக்காக இரண்டு முறை மாங்காடு வந்து போனார்.
இந்த வீட்டைப் பார்த்தவுடன் அந்த அம்மையார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்ற விவரத்தை அவரிடம் கூறினோம்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்” என்றார் அந்த அம்மையார் நன்றி கலந்த பார்வையுடன்.!
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி அந்த தாயாரிடம் வழங்கினோம்.
ஒவ்வொரு மாதமும் இது போல் பொருட்களை வாங்கிக் கொடுப்பதாக கூறிவிட்டு அவரிடம் இருந்து விடை பெற்றோம்.!
அந்த அம்மையாருக்கு உதவிக்கரம் நீட்டி அவரை மகிழ்வித்த மனித நேயர்கள் , சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுகள்!
வீடு கட்டத் தொடங்கிய நாள் முதல் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட அன்பு சகோதரி மஞ்சுளா அவர்களுக்கும் நன்றி.!
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”.(திருக்குறள் 102)
பொருள்:
உரிய சமயத்தில் பயன் கருதாது செய்யப்படும் உதவியின் அளவானது உலகை விடப் பெரியதாகும்.
– புரசை வெங்கடேசன்
. உதவும் கைகள்
9840914739
02.08.25.




